லஹைனா, ஹவாயி: ஹவாயி தீவின் லஹைனா பகுதியில் ஏற்பட்ட மோசமான காட்டுத் தீயால் மாண்டோர் எண்ணிக்கை 89க்கு உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில் ஏற்பட்ட ஆக மோசமான காட்டுத் தீயாக அது கருதப்படுகிறது.
லஹைனாவில் 2,200க்கு மேற்பட்ட கட்டடங்கள் சேதமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏறத்தாழ US$5.5 பில்லியன் ($7.4 பில்லியன்) மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்ததாகக் கூறப்பட்டது.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். காட்டுத் தீ குறித்து முறையான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்று குடியிருப்பாளர்கள் கூறினர். அதிகாரிகள் காட்டுத் தீயால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைத்து மதிப்பிட்டதாகக் குறைகூறல்கள் எழுந்துள்ளன.
முன்னொரு காலத்தில் ஹவாயி அரச குடும்பத்தின் வசிப்பிடமாகத் திகழ்ந்த லஹைனாவில் சாம்பல் காடாகக் காட்சியளிக்கிறது.
லஹைனாவில் வசித்ததற்கான ஆதாரங்களைக் காட்டினாலும் அந்தப் பகுதி முற்றிலும் பாதுகாப்பானது என்று அறிவிக்கப்படும்வரை குடியிருப்பாளர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்கின்றனர் அதிகாரிகள். இது பாதிக்கப்பட்டோரின் சினத்தைத் தூண்டியுள்ளது.