கோலாலம்பூர்: மலேசியாவைப் பாதித்துள்ள புகைமூட்டம் அடுத்த மூன்றிலிருந்து ஐந்து நாள்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
அந்தக் காலகட்டத்தில் நிலைமையில் அதிக மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் காற்றுத்தரத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுசெல்ல அந்த மழைப் பொழிவு போதாது என்று மெட்மலேசியாவின் தேசிய வானிலை, நிலநடுக்கச் செயல்பாட்டு நிலையத்தின் மூத்த இயக்குநர் மாக்ருன் ஃபாட்ஸ்லி முகம்மது ஃபாமி கூறியுள்ளார்.
“இதுவரை எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி புகைமூட்டத்தில் பெரிய மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. நிலைமை பெரும்பாலும் அப்படியேதான் இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. தற்போதைய வறண்ட சூழலைப் பார்க்கும்போது வரும் நாள்களில் மழை சிறிதளவுதான் பெய்யும்.
“அந்த மழை கைகொடுக்கவேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை. ஆனால், புகைமூட்டம் அதிகமாக இருந்தால் சிறிதளவு மழை, அதன் தாக்கத்தை அகற்ற உதவாது,” என்று அவர் விவரித்தார். பெர்னாமா ஊடகத்துக்கு அளித்த நேர்காணலின்போது அவர் இவ்வாறு சொன்னார்.
சரவாக்கில் பாதிப்பு
சரவாக் மாநிலத்தின் மேற்கு, தெற்குப் பகுதிகளில் புகைமூட்டப் பிரச்சினை மேலும் மோசமாக இருப்பதாகவும் திரு மாக்ருன் ஃபாட்ஸ்லி கூறினார். அதன் காரணமாக, செரியான் நகரில் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதோடு, கிள்ளான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட மலேசிய தீபகற்பப் பகுதிகளும் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநிலம்
இந்நிலையில், பினாங்கு மாநிலத்தில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) பிற்பகல் 1 மணி நிலவரப்படி பினாங்கில் உள்ள மிண்டன் குடியிருப்புப் பகுதியில் ஏபிஐ குறியீடு 103ஆகப் பதிவானது. மேலும், பாலிக் புலாவில் குறியீடு 89ஆகவும் செபெராங் பெராயில் 94ஆகவும் செபெராங் ஜெயாவில் 95ஆகவும் பதிவானது.
ஏபிஐ குறியீடு 100லிருந்து 200க்கு இடையே பதிவானால் அது காற்றுத்தரம் அபாயக் கட்டத்தில் இருப்பதைக் குறிக்கும். நிலைமை மிகவும் அபாயகரமானக் கட்டத்தை எட்டினால் தமது மாநிலம், நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் என்று பினாங்கு முதல்வர் சோவ் கொன் யாவ் தெரிவித்தார்.


