கோலாலம்பூர்: மலேசியாவில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோரில் 14.7 விழுக்காட்டினர் மட்டுமே ஆரோக்கியமாக மூப்படைவதாகத் தரவுகள் கூறுகின்றன.
தேசியச் சுகாதாரம் மற்றும் நோயற்ற வாழ்க்கை அமைப்பு ஆய்வை மேற்கொண்டது.
“14.7 விழுக்காடு என்பது கவலை தரும் விதமாக உள்ளது. உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு நெருக்குதல் தரக்கூடாது,” என்று மலேசியச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
“அமைச்சராக இந்தத் தரவுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சி ஏதுமில்லை. முழுமையான ஆய்வுத் தகவல்கள் இன்னும் மூன்று மாதத்திற்குள் தயாராகும்,” என்று சுகாதார அமைச்சர் ஸூல்கிஃபிலி அகமது செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசியச் சுகாதாரம் மற்றும் நோயற்ற வாழ்க்கை அமைப்பு முதல்முறையாக 1986ஆம் ஆண்டு ஆய்வுத் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியது.
இருப்பினும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பாக இரண்டு முறை மட்டுமே அது ஆய்வு நடத்தியது. முதல் ஆய்வு 2018ஆம் ஆண்டும் இரண்டாவது ஆய்வு 2025ஆம் ஆண்டும் நடத்தப்பட்டன.
2025ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 7,528 பேரிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டன. மக்களை நேரில் சென்று பார்ப்பது, அவர்களிடம் மருத்துவச் சோதனைகளைச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது.
“ஆய்வின் மூலம் மூத்தோர் எதிர்நோக்கும் தினசரி சவால்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதன்மூலம் அவர்களுக்கான உதவித் திட்டங்கள் வகுக்கப்படும்,” என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டுத் தரவின்படி மலேசியாவில் கிட்டத்தட்ட 4.1 மில்லியன் பேர் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள். 2036ஆம் ஆண்டுவாக்கில் மலேசியா மூப்படைந்த நாடாக மாறக்கூடும்.

