பெட்டாலிங் ஜெயா: மலேசிய வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் பட்டியலில், கோலாலம்பூர் முதல் நிலை எச்சரிக்கை வரிசையில் சேர்க்கப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வரை பதிவாவதே முதல் நிலை எச்சரிக்கை என வரையறுக்கப்பட்டுள்ளது.
பேராக்கில் செலாமா, கோலாகங்சார், கிந்தா ஹுலு பேராக் ஆகிய பகுதிகள்; பினாங்கில் இருக்கும் வடக்கு மாவட்டங்கள், தீமூர்-லாட் வட்டாரம்; கெடாவில் சிக், பாடாங் தெராப், குபாங் பாசு, லங்காவி தீவு, கோலா மூடா, கூலிம், பண்டார் பாரு ஆகியவை வெப்ப அலையால் பாதிக்கப்படக்கூடிய பிற பகுதிகளாகும்.
தொடர்ந்து மூன்று நாள்களுக்கு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவானால், அது இரண்டாவது நிலை வெப்ப அலை எச்சரிக்கையாகக் கருதப்படும்.
அந்த வரிசையில், கெடா மாநிலத்தில் உள்ள பாலிங், பெண்டாங், பொக்கோக் சேனா ஆகிய மூன்று இடங்களில் நிலைமை மிகவும் தீவிரமாக இருந்தது.
மார்ச் 23ஆம் தேதி, மாலை 4 மணி வரை பதிவான வெப்பநிலை அடிப்படையில் மேற்குறிப்பிட்ட விவரங்களை மலேசிய வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டது.

