சோல்: தென்கொரிய வானிலை ஆய்வு நிலையம், புதிய முறையின்கீழ் சோல் நகரத்திற்கு ‘கடுமையான வெப்ப அலை’ என்ற எச்சரிக்கையை அறிவித்துள்ளது.
தீவிர வெப்பநிலை பற்றி பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக 2026ஆம் ஆண்டில் அம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜூலை 31, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் வெப்பம் 42.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததால், நாட்டில் இதுவரை இல்லாத வெப்பம் பதிவானது. இதனால் சுமார் 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 3ஆம் தேதியும் வெப்ப அலை நீடித்தது.
இருப்பினும், ஒன்பது மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த நகரத்தின் சில பகுதிகளில் மேலும் மோசமான வெப்பத்தை எதிர்பார்க்கலாம் எனக் கூறிய, கொரிய வானிலை நிலையம், சோல் நகரத்திற்கு முதல் முறையாகக் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை வெளியிட்டது.
“வெளியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் வேலைகளையம் முடிந்தவரை நிறுத்த வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும்,” என்று அது தனது வெப்ப எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“பொதுமக்கள் குளிரூட்டப்பட்ட உட்புற இடங்கள், ஒதுக்கப்பட்ட வெப்பத் தணிப்பு நிலையங்கள் போன்ற குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்,” என்றும் அது வலியுறுத்தியது.
தலைநகரில் உள்ள மக்கள் ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை குளிரான நேரத்திலும் நேரடி சூரிய ஒளியைத் தவிர்த்து நிழலான பாதைகள் வழியாக அலுவலகங்களுக்குச் சென்றனர்.

