ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கலிமந்தான் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் கடுமையான புகைமூட்டம் நிலவுகிறது.
மில்லியன் கணக்கான மக்களின் கல்வி, தூய்மையான காற்று, குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மலேசியா வரை பரவியுள்ள இந்தக் கடுமையான புகைமூட்டம் மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. எல் நினோ பருவநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியால் இந்தப் பேரிடர் மோசமடைந்துள்ளது.
மேற்கு கலிமந்தானில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 200,000 மாணவர்கள் வீடுகளிலிருந்தே கல்வி கற்கின்றனர். இருப்பினும் சீரான இணையத் தொடர்பு, மின்சாரம் இல்லாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
மூன்றாவது வாரமாகப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது கவலை தருவதாக ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மழை பெய்தால் புகைமூட்டம் குறையும் என இந்தோனீசியர்கள் பலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
ஏறத்தாழ 700,000 மக்களுக்குச் சுகாதாரச் சேவைகளை வழங்கும் குபு ராயா வட்டாரத்தில் செப்டம்பர் மாதம் மட்டும் 1,400க்கும் மேற்பட்டோர் மூச்சுப் பிரச்சினைக்காகச் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 6,396 ஆக இருந்தது. தினசரி 1,000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டாலும், அதற்கான இருப்பு குறைந்து வருகிறது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வறட்சியால் தூய நீர் கிடைக்காமல் வயிற்றுப்போக்கு பாதிப்புகளும் ஏற்படுகின்றன. எதிர்வரும் வாரங்களில் நிலைமை இன்னும் மோசமாகலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே போன்டியானாக் நகருக்கு வெளியே தீயைக் கட்டுப்படுத்த மக்கள் போராடி வருகின்றனர். உபகரணங்கள் வாங்க மக்களே நிதி திரட்டியுள்ளனர். பல நேரங்களில் அவர்கள் வாளிகளில் நீரை நிரப்பி தீயை அணைக்கின்றனர்.
கடந்த நான்கு நாள்களாக எரியும் தீயை அணைக்கப் போராடும் அவர்களுக்கு உணவு, முகக்கவசம் உள்ளிட்ட தற்காப்பு உடைகள் தேவைப்படுகின்றன என்று உள்ளூர் தலைவர் யோனாஸ் கூறினார்.
உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் அளவைவிட அதிக நச்சுத் தன்மையைக் கொண்ட இந்தப் புகை சிறுவர்கள், முதியவர்கள், ஆஸ்துமா நோயாளிகள், கர்ப்பிணிகளுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.


