கூச்சிங்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் ஒரு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த ஐவரும் கொல்லப்பட்டனர்.
அச்சம்பவம் வட சரவாக்கின் மாரூடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) லோ லெல்லாங் எஸ்டிஓஎல்போர்ட் எனப்படும் நீளம் குறைவான ஓடுபாதை உள்ள விமான நிலையத்துக்கு அருகே நிகழ்ந்தது. ரேலா லெலாங்கின் ஓடுபாதைக்கு அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக மிரி விமான நிலைய தீயணைப்பு, மீட்புச் சேவைப் பிரிவுக்குக் கிடைத்த முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் 9M-LLF என்ற பதிவு எண்ணைக் கொண்ட பிஓ-105 வகை ஹெலிகாப்டர் என்று மலேசிய சிவில் விமானத்துறை ஆணையம் தெரிவித்தது. சம்பவம் குறித்து விமானத் தகவல் சேவையிடமிருந்து செவ்வாய்க்கிழமை 3.58 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் அது குறிப்பிட்டது.


