இஸ்‌ரேலுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹிஸ்புல்லா

இஸ்‌ரேலுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹிஸ்புல்லா

1 mins read
11c660f6-307c-4cf1-b1d4-9219ed3f8f8f
லெபனானின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இஸ்‌ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. - படம்: ஏஎஃப்பி

பெய்ரூட்: இஸ்‌ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அந்நாட்டுக்கு எதிரான போர் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அக்டோபர் 17ஆம் தேதியன்று ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

இலக்கைத் துல்லியமாக சென்றடையக்கூடிய ஏவுகணைகளை இஸ்‌ரேலிய ராணுவத்தினர் மீது முதன்முறையாகப் பாய்ச்சியுள்ளதாக ஹிஸ்புல்லா கூறியது.

செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியிலிருந்து இஸ்‌ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான போர் முழுவீச்சில் நடந்து வருகிறது.

லெபனானின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இஸ்‌ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது.

இப்பகுதிகள் ஹிஸ்புல்லாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

செப்டம்பர் மாதத்தில் லெபனானுக்குள் இஸ்‌ரேலியப் படைகள் நுழைந்து நிலம் வழித் தாக்குதலைத் தொடங்கின.

இதையடுத்து, இஸ்‌ரேலிய ராணுவத்தினருக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வருகிறது.

செப்டம்பர் 27ஆம் தேதியன்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசான் நஸ்ரல்லாவை இஸ்‌ரேல் கொன்றது.

இந்நிலையில், தென்லெபனானில் உள்ள எந்த ஒரு கிராமமும் இஸ்‌ரேல் வசப்படவில்லை என்று அக்டோபர் 17ஆம் தேதியன்று ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் ஃபட்லாலா கூறினார்.

குறிப்புச் சொற்கள்