தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லெபனான் எல்லையில் பூசல்: இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை

1 mins read
03e47afa-ef6f-4bca-a978-616d188194f8
ஹிஸ்புல்லா ஏற்று நடத்திய நிகழ்வு ஒன்றில் பங்கெடுத்த மக்கள், லெபனான், பாலஸ்தீன, மஞ்சள் கொடிகளை அசைத்தவாறு படகில் செல்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

பெய்ரூட்: லெபனான் உடனான எல்லை அருகே உள்ள பகுதிகளில் இடம்பெயர்ந்த 100,000 பேரை அவர்களின் வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப நோக்கம் கொண்டிருக்கும் இஸ்ரேலின் போர் முயற்சி, மேலும் நூறாயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்துவிடும் என ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்டாம் தளபதி எச்சரித்துள்ளார்.

வடக்கு இஸ்ரேலில் பாதுகாப்பை பழைய நிலைக்குக் கொண்டுவர இஸ்ரேல் உறுதியுடன் இருப்பதாக அதன் தற்காப்பு அமைச்சர் யோவ் காலண்ட் கூறியதைத் தொடர்ந்து, ஈரானின் ஆதரவைப் பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்டாம் தளபதியான நயிம் காசிம் இந்த எச்சரிக்கையை சனிக்கிழமை (செப்டம்பர் 14) வெளியிட்டார்.

“வடக்கில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், நாங்கள் அதற்குத் தயாராகி வருகிறோம்,” என கடந்த வாரம் திரு காலண்ட் ராணுவப் படைகளிடம் கூறினார்.

இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பேசிய திரு காசிம், “போருக்குச் செல்ல எங்களுக்கு எண்ணமில்லை. ஏனெனில், அது பயன் தராது என நாங்கள் கருதுகிறோம்.

“என்றாலும், இஸ்ரேல் போரைத் தொடங்கினால், நாங்கள் அதை எதிர்கொள்வோம். இருதரப்புக்கும் பெருத்த சேதம் ஏற்படும்,” எனக் கூறினார்.

பூசல் காரணமாக இஸ்ரேல்-லெபனான் எல்லையில் வசித்த ஆயரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்