ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் கை, கால், வாய்ப் புண் (HFMD) கிருமித்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை நான்கு மடங்குக்கும் மேல் ஆகியுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இம்மாதம் 22ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பதிவான கை, கால், வாய்ப் புண் சம்பவங்கள், சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானவற்றில் நான்கு மடங்குக்கும் மேல் ஆகிவிட்டதாக மலேசிய ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி ஒன்றுக்கும் மார்ச் 22க்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 3,446 பேருக்கு அந்தக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக பினாங்கு இளையர், விளையாட்டு, சுகாதாரக் குழுவின் தலைவர் டேனியல் கூய் ஸி சென் தெரிவித்தார். சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் எண்ணிக்கை 677ஆக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். எண்ணிக்கை 409 விழுக்காடு கூடியிருக்கிறது.
செய்தியாளர் கூட்டம் ஒன்றில் அவர் பேசினார்.
எனினும், பெரும்பாலான கை, கால், வாய்ப் புண் நோயாளிகள் ஏழிலிருந்து 10 நாள்களுக்குள் குணமடைந்ததாகவும் திரு டேனியல் கூய் ஸி சென் குறிப்பிட்டார். அவர்களுக்குத் தனிப்பட்ட சிகிச்சை ஏதும் தேவைப்படவில்லை என்றும் அவர் சுட்டினார்.
யாருக்கும் தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை என்றும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.