கட்டணத்தை உயர்த்தினால் உரிமத்தை இழப்பீர்கள்: மலேசியப் பிரதமர்

கட்டணத்தை உயர்த்தினால் உரிமத்தை இழப்பீர்கள்: மலேசியப் பிரதமர்

1 mins read
ff7214e0-d7d3-4bf5-87fe-4ae3fe0bb231
‘கிளாங் வேலி’யில் உள்ள பேருந்து நிறுவனங்கள் தங்களுக்கு மாதாந்திர டீசல் ஒதுக்கீடு போதவில்லை என்று கூறியதாக செய்தி இணையவாசல் ஒன்று தெரிவித்தது. - படம்: மலேசிய ஊடகம்

புத்ராஜெயா: டீசல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பள்ளிப் பேருந்து நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களை உயர்த்தக்கூடாது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.

அந்தப் பேருந்து நிறுவனங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து டீசல் சலுகைகள் கிடைப்பதால், அவற்றுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றார் அவர்.

பள்ளிப் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, அது பெற்றோருக்குச் சுமையை ஏற்படுத்தினால், புத்ராஜெயா அந்த நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யத் தயங்காது என்றும் திரு அன்வார் கூறினார்.

சலுகை விலையிலான டீசல் கட்டுப்பாட்டு முறையின்கீழ் வழங்கப்படும் வாகன அட்டை, பள்ளி, விரைவுப் பேருந்து நிறுவனங்கள் அவற்றின் கட்டணங்களை அதே நிலையில் வைத்திருக்க உதவியிருப்பதாக, மலேசியப் பள்ளிப் பேருந்து சங்கங்கள் கூட்டமைப்பு கூறியதாக, ‘எஃப்எம்டி’ குறிப்பிட்டது.

பள்ளிப் பேருந்துகளுக்கு, லிட்டருக்கு 1.88 ரிங்கிட்டுக்கு விற்கப்படும் மாதாந்திர டீசல் ஒதுக்கீடான 1,800 லிட்டர், செயல்பாட்டுச் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வகை செய்ததாக அதன் தலைவர் அமாலி முனிஃப் ரஹ்மட் தெரிவித்தார்.

இருப்பினும், வாகன அட்டையின்கீழ் கிடைக்கும் மாதாந்திர டீசல் ஒதுக்கீடு போதவில்லை என்பதால் கட்டணங்களை உயர்த்த திட்டமிடுவதாக கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பள்ளிப் பேருந்து நிறுவனங்கள் கூறியதாக ‘ஸ்கூப்’ இணையவாசல் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்