துபாய்: மொரிஷியசில் ஓர் இந்துப் பெண்ணான 26 வயது நீலம் கோகுல்சிங், முஸ்லிம் நண்பர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ரமலான் மாதத்தில் நோன்பிருக்கத் தொடங்கினார்.
ஆனால், அதுவே இப்போது அவருக்கு தன்னைத்தானே அறிந்துகொள்ளும் ஒரு வழிமுறையாகிவிட்டது.
மலேசியாவில் மாணவியாக இருந்து, பின்னர் அங்கேயே வேலை செய்தபோது நீலத்தின் நோன்புப் பயணம் தொடங்கியது.
“மலேசியாவில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். கடந்த 2021ஆம் ஆண்டு முதன்முறையாக ரமலான் நோன்பிருந்தேன். மலேசியாவில் எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து சுகூர், இஃப்தார் உணவருந்துவது எனது வழக்கம். என்னைப் பொறுத்தவரை, நான் இந்துவாக இருந்தாலும் ரமலான் நோன்பிருப்பது ஒற்றுமையை வெளிப்படுத்துவதும் அவர்களது பண்பாட்டை அறிந்துகொள்வதும் ஆகும்,” என்று கலீஜ் டைம்ஸ் ஊடகத்திடம் சொன்னார் நீலம்.
ஈராண்டுகளுக்குமுன் துபாய் சென்ற நீலம், அங்கு இப்போது ஒரு நிதித் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
“இங்கும் என்னைச் சுற்றியுள்ள பலரும் முஸ்லிம் என்பதால் இங்கேயும் ரமலான் நோன்பிருப்பதைத் தொடர்கிறேன்,” என்கிறார் இந்த இளம்பெண்.
“உணவு, நீரின்றி வேலைசெய்வது எவ்வளவு கடினம் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு இது உதவியது,” என்றும் இவர் சொன்னார்.
ரமலான் உணர்வைத் தழுவியுள்ள நீலத்தின் அடுத்த இலக்கு அரபு மொழியைக் கற்றுக்கொள்வதுதான்.
“நீண்டகாலத்திற்கு நான் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) வசிப்பேன் என நினைக்கிறேன். அதனால், அரபு மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். பெரும்பாலும் இவ்வாண்டின் பிற்பகுதியில் அதனைத் தொடங்கலாம். சமூகத்தில் மற்றவர்களுடன் கலந்துறவாட அது உதவும் என்பதுடன், வேலை சார்ந்தும் அது எனக்குப் பயன் தரும்,” என்கிறார் நீலம்.