தெகுசிகல்பா, ஹோண்டுரஸ்: ஹோண்டுரஸில் மேயர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
90 டன் ‘கொக்கைன்’ போதைப்பொருளை படகு, விமானம் வழியாக அமெரிக்காவுக்குள் கடத்த போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து செயல்பட்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
புருஸ் லகுனாவின் மேயர் வில்மர் மனோலோ வூட் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹோண்டுரஸ் அரசுதரப்பு வழக்கறிஞர்கள் அலுவலகத்தின் பேச்சாளர் கூறினார்.
மூன்று போதைப்பொருள் கும்பல்களுடன் செயல்பட்டதாக வூட்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லாஸ் பினிங்கோஸ், லாஸ் யானேஸ், லாஸ் அமடோர் ஆகியவையே அவை.
கருத்து பெறுவதற்கு, வூட்டையும் அவரது வழக்கறிஞர்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
வூட்டிற்குத் தனிப்பட்ட முறையில் 30 டன் ‘கொக்கைன்’ போதைப்பொருள் கிடைத்ததாகவும், அமெரிக்காவுக்குள் கடத்த அவற்றை ஹோண்டுரஸ் வழியாக அவர் கொண்டுசென்றதாகவும் பேச்சாளர் கூறினார்.
வூட் 15 ஆண்டுகளுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதன் தொடர்பிலான செயல்பாடுகளைச் சொந்தமாகவே நடத்தத் தொடங்கியதாகவும் அதிகாரிகள் நம்புகின்றனர்.

