ஏமனில் உள்ள ஈரான் ஆதரவுபெற்ற ஹூதிப் படையினர் மத்திய கிழக்குப் போரில் நுழைந்து தாக்குதல் நடத்தியதன் காரணமாக திங்கட்கிழமை (மார்ச் 30) எண்ணெய் விலைகள் மூன்று விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்தன.
போர் வட்டாரத்தில் அமெரிக்கப் படைகள் அதிகமான படையினரைக் குவித்து வருவதால் எழுந்துள்ள அச்சமும் எரிசக்திச் சந்தையில் எதிரொலித்தது.
அதன் காரணமாக, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை US$116.43க்கு உயர்ந்தது. கடந்த வாரத்தின் கடைசி வேலை நாளான மார்ச் 27ஆம் தேதி 4.2 விழுக்காடு அதிகரித்த பின்னர் திங்கட்கிழமையும் அதன் ஏற்றம் தொடர்ந்தது.
போர் தொடங்கிய பின்னர், இந்த மார்ச் மாதத்தில் மட்டும் பிரென்ட் கச்சா எண்ணெய் விலைகள், சாதனை அளவாக 50 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துவிட்டன.
ஜூன் மாதம் வரை போர் நீடித்தால் எண்ணெய் விலை US$200ஐ தொடும் சாத்தியம் இருப்பதாக மெக்வாரி குழுமம் தெரிவித்துள்ளது.

