வாஷிங்டன்: அமெரிக்காவில் பிரபலமாக உள்ள டிக்டாக் சமூக ஊடகத் தளத்தை வாங்கும் எண்ணம் தமக்கு இல்லை என இலோன்மஸ்க் கூறியுள்ளார்.
சீன நிறுவனமான பைட்டான்ஸ் டிக்டாக் தளத்தின் உரிமையாளராக உள்ளதால், பாதுகாப்புக் காரணங்கள் கருதி, அமெரிக்க அரசு டிக்டாக்கை தடை செய்யப்போவதாகக் கூறியுள்ளது. இந்நிலையில், இலோன் மஸ்க் தமது எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் மத்தையாஸ் டெஃனர் என்ற பெரும் செல்வந்தர் சென்ற மாதம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசியபோது திரு இலோன் மஸ்க் டிக்டாக் பற்றிக் கூறினார்.
அந்த மாநாட்டில் காணொளி வழி பங்கேற்ற திரு இலோன் மஸ்க்கின் உரை சனிக்கிழமை (பிப்ரவரி 8ஆம் தேதி) வெளியிடப்பட்டது. அதில் அவர், “டிக்டாக்கை வாங்க நான் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதை வாங்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை,” என்று தெரிவித்தார்.
தனிப்பட்ட முறையிலும் தான் டிக்டாக் பயன்படுத்துவதில்லை என்று 2022ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக ஊடகத் தளத்தை வாங்கி பின்னர் அதை எக்ஸ் என்று பெயரிட்ட திரு இலோன் மஸ்க் கூறினார். .