ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) ஓட்டுநராகப் பணிபுரியும் முனாவர் ஃபைரோசுக்கு புத்தாண்டுத் தொடக்கம் மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதி இடம்பெற்ற ‘பிக் டிக்கெட்’ அதிர்ஷ்டச் சீட்டுக் குலுக்கலில் முனாவருக்கு 20 மில்லியன் திர்ஹம் (ரூ.44.75 கோடி) பரிசு விழுந்தது.
முனாவர் உட்பட மொத்தம் 30 பேர் சேர்ந்து பரிசுச்சீட்டை வாங்கியதில் அப்பரிசுத்தொகையை அவர்கள் சமமாகப் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.
கடந்த ஐந்தாண்டுகளாக ஒவ்வொரு மாதமும் முனாவர் ‘பிக் டிக்கெட்’ பரிசுச்சீட்டை வாங்கி வருவதாக யுஏஇ ஊடகச் செய்தி தெரிவித்தது.
தமக்கு இவ்வளவு பெரிய தொகை பரிசாக விழுந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்கிறார் முனாவர்.
“இது நிகழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இன்னும் அதிர்ச்சியில்தான் இருக்கிறேன். அதிலிருந்து மீண்ட பின்னரே அடுத்து என்ன செய்வது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்,” என்று அவர் சொன்னார்.
2023 இறுதி நாள், சுதீஷ் குமார் குமரேசன் என்ற இந்தியருக்கும் சிறப்பான நாளாக அமைந்தது.
அவருக்குப் பரிசுச்சீட்டுக் குலுக்கலில் ஒரு மில்லியன் திர்ஹம் (ரூ.22.4 கோடி) பரிசு விழுந்தது.
விடுமுறைக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது அபுதாபி அனைத்துலக விமான நிலையத்தில் அந்தப் பரிசுச்சீட்டை வாங்கியதாக சுதீஷ் சொன்னார்.
“என் ஏழு வயது மகளே அந்த எண்ணைத் தெரிவுசெய்தாள். பெருந்தொகை பரிசு விழுந்ததால் என் குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் கட்டியுள்ள வீட்டிற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இந்தப் பணத்தைப் பயன்படுத்துவேன்,” என்றார் சுதீஷ்.