பாரிஸ்: ஈரான் போர் தொடர்ந்தால் உலகில் உணவுகளின் விலை அதிகரிக்கும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உணவு, வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் போர் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் உலக அளவில் உணவுகள் விலை கூடியது. இதற்கு முன்னர் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உணவுகள் விலை அதிகமாக இருந்தது.
விலை உயர்வுக்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றம்தான் என்று அமைப்பு கூறுகிறது.
ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. அதன் வழிதான் உலக நாடுகள் பலவற்றுக்கு எரிபொருள் செல்கிறது. தற்போது நீரிணை மூடப்பட்டுள்ளதால் போதிய எரிபொருள் இல்லாமல் உலக நாடுகள் தவிக்கின்றன.
தற்போது தானியங்களுக்கான தேவையும் அதிகமாக உள்ளது ஆனால் சந்தையில் போதிய அளவில் தானியங்கள் இருப்பில் இல்லை. இதனால் விலைகள் மேலும் அதிகரிக்கின்றன.
விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காவிட்டால் விவசாயம் செய்வதைக் குறைப்பார்கள் இதனால் உணவுப் பொருள்கள் சந்தைக்கு வருவது குறையும். இது விலையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
தற்போது விவசாயம் செய்வது வழக்க நிலைக்குத் திரும்பாவிட்டால் அடுத்த ஆண்டு வரை விலை ஏற்றத்தின் தாக்கம் இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

