ஜகார்த்தா: இந்தோனீசியக் காவல்துறை, இவ்வாண்டுக்கான ஹஜ், உம்ரா பயணங்களைச் சட்டவிரோதமாக ஏற்பாடு செய்த சந்தேகத்தின்பேரில் 13 பேரைக் கைது செய்துள்ளது.
300க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த மோசடியில் ஏமாற்றப்பட்டனர் என்று செவ்வாய்க்கிழமை (மே 19) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை குறிப்பிட்டது. சந்தேக நபர்களின் அடையாளங்களை அது வெளியிடவில்லை.
மோசடியில் ஏமாந்த பயணிகள் தங்கள் பணத்தைப் பெருமளவில் இழந்துள்ளனர்.
காவல்துறையும் ஹஜ், உம்ரா பயணங்களுக்கான சிறப்புச் செயல்பிரிவும் அக்குற்றங்கள் குறித்து செய்யப்பட்ட பொதுமக்களின் 20க்கும் மேற்பட்ட புகார்களை விசாரித்து வருகின்றன.
“முறையான விதிமுறைகளைப் பின்பற்றி, மக்கள் பாதுகாப்பாக தங்களது பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்ய விரும்புகிறோம்,” என்று தேசியக் காவல்துறையின் பேச்சாளர் ஜெனரல் ஜொனி எடிசன் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
யாத்திரை செல்ல விரும்புவோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மே 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஹஜ் பயணம் மேற்கொள்ள 221,000 இந்தோனீசியப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மோசடியில் சிக்கிய பயணிகளுக்கு அந்த 13 சந்தேக நபர்களும் $724, 562 (US$566,701) வரை இழப்பு ஏற்படுத்தியதாக திரு ஜொனி விளக்கமளித்தார்.

