பெங்களூரு: வரி, கணக்கியல் மென்பொருள்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான ‘இன்ட்யூட்’, அதன் முழுநேர ஊழியர்களில் 17 விழுக்காட்டினரை ஆட்குறைப்பு செய்ய உள்ளது.
அதன் மூலம் உலகம் முழுவதும் பணியாற்றும் அந்நிறுவனத்தில் 3,000 ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடும்.
நிறுவனக் கட்டமைப்பை எளிதாக்குவதிலும் செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கிய அம்சங்களிலும் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக ஆட்குறைப்பில் ஈடுபடுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
அந்தச் செய்தி வெளியானதும் புதன்கிழமை (மே 20) அமெரிக்கப் பங்குச் சந்தையில் இன்ட்யூட்டின் பங்கு விலை 14 விழுக்காடு சரிந்தது.
செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய இடையூறுகள் தொடர்பான அச்சம் நிலவும் வேளையில் ஆட்குறைப்பு நடவடிக்கை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஏழு நாடுகளில் இயங்கும் ‘இன்ட்யூட்’ நிறுவனத்தில் ஏறத்தாழ 18,200 பேர் வேலை செய்வதாக 2025 ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அதன் ஆண்டறிக்கை தெரிவித்தது.
செயற்கை நுண்ணறிவு இடையூறுகளால் அந்நிறுவனத்தின் வரி மொன்பொருள் வர்த்தகம் பாதிப்படையும் என முதலீட்டாளர்கள் கருதியதன் விளைவாக இவ்வாண்டு தொடக்கம் முதல் அதன் பங்குகள் 42 விழுக்காடு வீழ்ச்சிகண்டன.
இன்ட்யூட்டின் முதன்மையான நிதித் தயாரிப்பாக ‘டர்போடாக்ஸ்’ உள்ளது. குவிக்புக்ஸ், கிரெடிட் கர்மா போன்ற இதரக் கணக்கியல் மென்பொருள்களையும் அது நிர்வகிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
2026 நிதியாண்டிற்கான அதன் ‘டர்போடாக்ஸ்’ வருவாய் முன்னுரைப்பை US$5.282 பில்லியனிலிருந்து US$5.277 பில்லியனாகக் குறைத்துள்ளது ‘இன்ட்யூட்’.
முன்னதாக, அந்த வருவாய் US$5.305 பில்லியனிலிருந்து US$5.330 பில்லியனுக்கு ஏற்றம் காணும் என்று அது கணித்திருந்தது.

