கோலாலம்பூர்: ‘ஆட்டிசம்’ எனப்படும் மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்பதிலும் அவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுப்பதிலும் மலேசியக் காவல்துறை உறுதியாக இருப்பதாக மலேசியக் காவல்துறைத் தலைமை ஆய்வாளர் முகம்மது காலித் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று (மே 15) மலேசியக் காவல்துறை ஏற்பாடு செய்திருந்த மதியிறுக்கத் தின விழாவில் அவர் உரையாற்றினார்.
ஏற்றுக்கொள்ளுதல், புரிந்துகொள்ளுதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிலை என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள் என்று அவர் குறிப்பிட்டார்.
மதியிறுக்கம் என்பது குணப்படுத்த வேண்டிய குறைபாடு அல்ல, மாறாக அது மனித ஆளுமையின் ஒரு தனித்துவமான வகை என்று கூறினார். இவ்வகை பாதிப்பு உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் அவர்களைக் கையாளும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்குத் தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட காவல்துறை மதியிறுக்க மையம், காவல்துறையின் பணி என்பது சட்ட அமலாக்கத்தையும் தாண்டி சமூகப் பொறுப்புகளையும் உள்ளடக்கியது என்பதை நிரூபித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காவல்துறை, பெங்காமான் மலேசியா அறக்கட்டளை, அரசு அமைப்புகள் மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்புகள் இணைந்து செயல்படுவதன் மூலம் மதியிறுக்க பாதிப்புள்ள குழந்தைகளைத் தற்சார்பு உடையவர்களாக மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மையம் எதிர்காலத்தில் மலேசியாவில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் மதியிறுக்க சிகிச்சைக்கான ஒரு சிறந்த மையமாகத் திகழும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சியில் யாரும் ஓரங்கட்டப்படக்கூடாது என்பதே தமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

