இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
இஸ்லாமாபாத்துக்குள் நுழைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து சென்றனர்.
அரசாங்கக் கட்டடங்களிலிருந்து கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தூரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இம்ரான் கானின் ஆதரவாளர்கள் கைகளில் தடிகளை வைத்திருந்ததாகவும் காவல்துறையினரை நோக்கி அவர்கள் கற்கள் வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
அதுமட்டுமல்லாது, ஆர்ப்பாட்டக்காரர்களைக் குறிவைத்து காவல்துறை அதிகாரிகள் ரப்பர் தோட்டாக்களைச் சுட்டதாக அறியப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் மாண்டதாகவும் ஒன்பது பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இஸ்லாமாபாத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நவம்பர் 26ஆம் தேதியன்று நான்கு பாதுகாப்புப் படை அதிகாரிகளைக் கொன்றதாக பாகிஸ்தானிய அரசாங்கம் தெரிவித்தது.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் அந்த நான்கு பாதுகாப்பு அதிகாரிகளும் பொதுமக்களில் ஒருவரும் மாண்டதாக அறியப்படுகிறது.
மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, இஸ்லாமாபாத்தை நோக்கி மேலும் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் படையெடுக்கக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ள நிலையில், அவர்களைத் தடுத்து நிறுத்தும் பணிகளைப் பாகிஸ்தானிய அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழத்திருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை உண்மையான தோட்டாக்கள் பயன்படுத்தி கண்டதும் சுட உத்தரவிடப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத திருமணம், ஊழல், கலவரம் நடத்த தூண்டியது போன்ற
குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.