ஜூலை மாதத்தில் ரஷ்யா நடத்திய தீவிரத் தாக்குதலில் உக்ரேனில் பொதுமக்களின் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) தெரிவித்துள்ளது.
மே மாதம் தொடங்கி மாத அடிப்படையில் செய்யப்பட்ட ஒப்பீட்டில், மூன்றில் ஒரு பங்கு அதிகமாக ராணுவப் பின்னணி இல்லாத பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று அறியப்படுகிறது.
போர்களங்களைக் கடந்து பல பகுதிகளையும் நகர்களையும் ஜூலை மாதம் ரஷ்யா தீவிரமாகத் தாக்கியது. அதில் ஏவுகணைகளும் ஆளில்லா வானூர்திகளும் (ட்ரோன்) அதிகம் பயன்படுத்தப்பட்டன.
ஐக்கிய நாட்டு அமைப்பின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஜூலை மாதத்தில் உக்ரேனில் நடந்த ரஷ்யத் தாக்குதலில் 437 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 2,610 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் அது 30 விழுக்காடும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 70 விழுக்காடும் அதிகம் என்று அமைப்பு குறிப்பிட்டது.
நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஆயுதங்கள் மக்கள் அதிகம் மரணமடையக் காரணம் எனவும் தெரிகிறது. மொத்த எண்ணிக்கையில் 38 விழுக்காட்டு மரணங்கள் அவற்றால் நிகழ்ந்துள்ளன.
போர்க்களங்களில் இருந்து வெகு தூரத்தில் அமைந்துள்ள நகர்களிலும், புறநகர்களிலும் நடந்த அதிகமான தாக்குதல்களால் மக்களில் பலர் மரணமடைந்தனர் என்று ஐநா அறிக்கை விளக்கியது.


