இந்தியச் செல்வந்தர்களால் துபாய் சொத்துச் சந்தையில் பணம் புரள்கிறது

இந்தியச் செல்வந்தர்களால் துபாய் சொத்துச் சந்தையில் பணம் புரள்கிறது

2 mins read
22a77e64-24ba-4d7b-88ba-0381c251bcfa
உல்லாசத் தீவான பாம் ஜுமேராவில் இருக்கும் சொகுசுக் குடியிருப்புகள். (பின்னணியில்) துபாயின் வானுயர்க் கட்டடங்கள். - படம்: புளூம்பர்க்

துபாய்: இந்திய வம்சாவளியினரான திரு அடல் சஜன், துபாயில் தமது நிறுவனம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஏற்றங்களில் ஒன்றைக் காண்கிறார்.

இவரது குடும்பம் கட்டிய வானுயர் குடியிருப்புக் கட்டடத்தில் இருக்கும் சொகுசு வீடுகளைப் பணக்கார இந்தியர்கள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு வாங்கியுள்ளனர். அந்த வீடுகளின் சராசரி மதிப்பு US$250,000 (S$332,000).

துபாயின் ‘பெவர்லி ஹில்ஸ்’ என்று அழைக்கப்படும் ‘எமிரேட்ஸ் ஹில்ஸ்’ குடியிருப்புப் பேட்டையில் திரு சஜனின் சொந்த வீடே 26,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.

டனுபே குழும மேலாண்மை இயக்குநரான திரு சஜன், 34, தமது வீட்டில் அளித்த பேட்டியில், “இங்குள்ள பெரும்பாலான வீடுகள் இந்தியர்களுக்குச் சொந்தமானவை என்றே நினைக்கிறேன்,” என்றார்.

பளிங்குக் கற்கள் உடைய இவரது வீட்டின் வரவேற்பறை, சிறிய காற்பந்துத் திடலின் அளவுக்குச் சமம்.

வீட்டு வாகனக்கூடத்தில் பெண்ட்லி, ரேஞ்ச் ரோவர்ஸ், லம்போர்கினி என 15க்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள் உள்ளன.

திரு சஜன் குடும்பம் பண வசதி தேடியது புதிதன்று. ஆனால், பணக்கார இந்தியர்கள் இவரது நிறுவனத்தில் சொத்துகளை வாங்குவதால், திரு சஜனின் பண பலம் பெருகியுள்ளது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) 30 ஆண்டுகளுக்கு முன்பு திரு சஜனின் தந்தை டனுபே குழுமத்தை நிறுவினார். அதன் வாடிக்கையாளர்களில் இந்தியர்கள் 32 விழுக்காடு பங்கு வகிக்கின்றனர். அக்குழுமத்தின் அசுர வளர்ச்சிக்கு அவர்கள் முக்கியக் காரணமாக விளங்குகின்றனர்.

கடந்த ஆண்டு இந்தியர்களின் மொத்த குடும்ப வருமானம் 4.6 விழுக்காடு கூடியதாக யுபிஎஸ் வங்கி மதிப்பிடுகிறது.

யுஏஇயின் எளிதான விசா கொள்கைகள், குறைவான வரி, அருகாமை ஆகிய அம்சங்கள் இந்திய முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கின்றன.

துபாயில் இந்தியர்களே அதிகமான சொத்துகளைத் தொடர்ந்து வாங்குவதாக தரகு நிறுவனமான ‘பெட்டர்ஹோம்ஸ்’ கூறுகிறது.

பெருஞ்செல்வந்தரான முகேஷ் அம்பானி, கடந்த ஆண்டு துபாயின் செயற்கை தீவான பாம் ஜுமேராவில் கடற்கரையோர சொத்து ஒன்றை வாங்கியதாக இதுகுறித்து விவரமறிந்தோர் அப்போது புளூம்பர்க் செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தனர்.

இந்திய நடிகர் விவேக் ஓபராயும் துபாயில் வீடு மற்றும் சொத்து நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளார். துபாயில் இவரது ரோல்ஸ் ராய்ஸ் காரைக் காட்டும் படங்கள் இன்ஸ்டகிராமில் உள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சின் தகவல்படி, யுஏஇயில் ஏறத்தாழ 3.5 மில்லியன் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவுடன் யுஏஇ பல்லாண்டு காலமாக கலாசாரத் தொடர்பு கொண்டுள்ளதால் இந்தியர்கள் பலருக்கும் துபாய் சொந்த இல்லமாகவே உள்ளது.

குறிப்புச் சொற்கள்