நியூயார்க்: விமானத்தில் 14 வயதுச் சிறுமிக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்தபோது, சுய இன்பம் அனுபவித்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து இந்திய-அமெரிக்க மருத்துவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாஸ்டன் கூட்டரசு நீதிமன்றத்தில் இடம்பெற்ற மூன்று நாள் விசாரணைக்குப் பிறகு, புதன்கிழமையன்று (ஜனவரி 31) டாக்டர் சுதிப்த மொகந்தி, 33, எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்பது உறுதியானது.
கடந்த 2022 மே மாதம் ஹோனலூலுவிலிருந்து பாஸ்டனுக்குச் சென்ற ஹவாயியன் விமானத்தில் பயணம் செய்தபோது டாக்டர் மொகந்தி அந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
“நான் திருமணம் செய்யவிருந்த பெண் அப்பயணத்தின்போது என்னருகில் அமர்ந்திருந்தார். எங்களுக்கு ஏன் இப்படி நடந்தது என்பது இருவருக்குமே புரியவில்லை,” என்று டாக்டர் மொகந்தி சொன்னதாக ‘நியூயார்க் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
“ஒரு மருத்துவராக, மற்றவர்களைப் பேண நான் என் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டபோது வெளியே செல்லவே தயக்கமாக இருந்தது,” என்றும் டாக்டர் மொகந்தி குறிப்பிட்டார்.
டாக்டர் மொகந்தி தம்மைக் கழுத்துவரை போர்வையால் மூடிக்கொண்டதாகவும் அவரது ஒரு கால் மேலும் கீழுமாகச் சென்று வந்தது என்றும் அச்சிறுமி குற்றம் சாட்டியிருந்தாள்.
அவரது செய்கை ‘அருவருக்கத்தக்க’ வகையில் இருந்ததாகக் கூறி, காலியாக இருந்த வேறு இருக்கைக்கு அச்சிறுமி மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விமானம் பாஸ்டனில் தரையிறங்கியதும், தமக்கு நேர்ந்த அனுபவம் குறித்து அப்பெண் தன்னுடைய தாத்தா, பாட்டியிடம் கூறியதையடுத்து, அவர்கள் காவல்துறையை அணுகினர்.