தம்மாம்: சவூதி அரேபியாவின் அல் ஆசா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த பெரும் தீவிபத்தில் இந்தியர் ஒருவர் உட்பட பத்துப் பேர் மாண்டுபோயினர்.
அஜ்மல் ஷாஜகான் என்ற அந்த இந்தியர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். மாண்டோரில் மற்ற அனைவரும் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்கள்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அல் ஆசாவில் உள்ள தொழிற்பகுதியில் இருக்கும் ஒரு பட்டறையில் தீப்பிடித்தது. உயிரிழந்த அனைவரும் அப்பட்டறையின் மேற்பகுதியில் தங்கியிருந்தனர்.
வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் அவர்கள் அனைவரும் அதிகாலைவரை வேலை செய்ததாகவும் தீப்பற்றியபோது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
பத்து தீயணைப்புப் பிரிவுகளைச் சேர்ந்த தீயணைப்பாளர்கள் விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன்பின் மாண்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.