அபுதாபி: வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவர்க்கு ஒரே நாளில் இரண்டு முறை பரிசுச்சீட்டில் பரிசு விழுந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
அபுதாபியில் அண்மையில் நடந்த வாராந்தர ‘பிக் டிக்கெட்’ அதிர்ஷ்டக் குலுக்கலில் இருமுறை வென்றார் திரு அஜிமோன் கொச்சுமன்.
இவர் ஒன்பது ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார். தம் நண்பர்களுடன் சேர்ந்து அங்கு ஓர் ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த கொச்சுமன் வாங்கிய பரிசுச்சீட்டிற்கு முதலில் 30,000 திர்ஹமும் (S$11,040, ரூ.674,350) பின்னர் நேரடிக் குலுக்கலில் 10,000 திர்ஹமும் பரிசு கிடைத்தது.
“10,000 திர்ஹம் பரிசிற்கான காசோலையைப் பெற நான் மேடைக்கு விரைந்தேன். அதன்பின்னரே ‘பிக் டிக்கெட்’டிலிருந்து என் கைப்பேசிக்குப் பல அழைப்புகள் வந்திருந்ததைக் கண்டேன். நான் வாங்கிய பரிசுச்சீட்டிற்கு மேலும் 30,000 திர்ஹம் பரிசு விழுந்திருப்பதாக எதிர்முனையிலிருந்து ஒருவர் சொன்னார்,” என்று திரு கொச்சுமன் கூறியதாக ‘கல்ஃப் நியூஸ்’ செய்தி தெரிவித்தது.
‘பிக் டிக்கெட்’ இணையத்தளம் வழியாக அல்லது அபுதாபி அனைத்துலக விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்திலுள்ள ‘பிக் டிக்கெட்’ விற்பனை நிலையங்களில் பரிசுச்சீட்டை வாங்கலாம்.