துபாய்: ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அபுதாபி நகரில் நடந்த அதிர்ஷ்டக் குலுக்கலில் கிட்டத்தட்ட $35 மில்லியனை (100 மில்லியன் திர்ஹம்) இந்திய ஊழியர் ஒருவர் வென்றுள்ளார்.
தென்னிந்தியாவைச் சேர்ந்த 29 வயது அனில்குமார் போலா மாதவ்ராவ் போலாவுக்கு இந்தப் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அதிர்ஷ்டக் குலுக்கல் வரலாற்றில் வெல்லப்பட்ட ஆக அதிகமான தொகை இதுவாகும்.
வெற்றியாளர் தொடர்பான காணொளியை அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தும் UAE Lottery திங்கட்கிழமை (அக்டோபர் 27) வெளியிட்டது.
அக்டோபர் 18ஆம் தேதி அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தப்பட்டது. இந்த அதிர்ஷ்டக் குலுக்கலை வெல்லும் வாய்ப்பு 8.8 மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும்.
“வெற்றிபெற்றதை என்னால் நம்ப முடியவில்லை. இனி பணத்திற்கான தேவை இல்லை. வாழ்க்கையில் நிம்மதிக்குத்தான் முன்னுரிமை. குடும்பத்தை ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு அழைத்து வந்து வாழ்க்கை முழுவதும் அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்,” என்று அனில்குமார் கூறினார்.
கிடைத்த பரிசுத் தொகையில் ஒரு பகுதியை ஏழை மக்களுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாகவும் அனில்குமார் தெரிவித்தார்.

