மெக்சிகோ சிட்டி: இந்திய நாட்டவர் ஒருவரை அடையாளம் தெரியாதவர்கள் சுட்டுக்கொன்று, பணம் பறித்துச் சென்ற சம்பவம் மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நிகழ்ந்தது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் அவ்விரு இந்தியர்களும் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தனர்.
மெக்சிகோ சிட்டி அனைத்துலக விமான நிலையத்தை ஒட்டிய பகுதியில் நாணய மாற்று வணிகரிடம் பணத்தை மாற்றியபின் அவர்கள் திரும்பிக்கொண்டிருந்ததாக ‘எல் நியூஸ்பேப்பர்’ செய்தி தெரிவித்தது.
அவர்களின் கார் ஒரு பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, இரு மோட்டார்சைக்கிளில் வந்த ஆடவர் நால்வர் அதனை விரட்டிச் சென்றனர். காரை நிறுத்தும்படி அவர்கள் காரினுள் இருந்தவர்களிடம் கூறினர்.
ஆனால், காரை ஓட்டியவர் அதற்கு இணங்க மறுக்கவே, மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கியால் அவரைச் சுட்டுக்கொன்றனர். அதன்பின்னர் காரிலிருந்த இன்னொருவரை மிரட்டி, 10,000 அமெரிக்க டாலர் பணத்தைப் பறித்துச் சென்றனர்.
இச்சம்பவத்தில் காரிலிருந்த இன்னோர் இந்தியர்க்குக் காயமேதும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியிலிருந்த கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பட்டப்பகலில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்ய மெக்சிகோ அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அங்குள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்தது.