இந்திய வம்சாவளியினரான 45 வயது திருமதி வனிதா குப்தாவை அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரல் பதவிக்கு பார்லிமென்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இவர் நியூ யார்க் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் 2001ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்.
அமெரிக்காவில் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவராக திகழும் இவர், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் சமூக உரிமைகள் தொடர்பில் உதவி அட்டர்னி ஜெனரலாக பொறுப்பு வகித்தவர்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபரான பின், நீதித் துறையில் மூன்றாவது உயரிய பதவியான, இணை அட்டர்னி ஜெனரலாக, வனிதா குப்தாவை நியமித்தார்.
அவரது நியமனத்தை உறுதி செய்வதற்காக, பார்லிமென்டின் செனட் சபையில் வாக்களிப்பு நடந்தது.
மொத்தம், 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சிக்கு தலா, 50 உறுப்பினர்கள் உள்ளனர்.
குடியரசு கட்சியின் லிசா முர்கோவ்ஸி ஆதரித்து ஓட்டளித்ததால், 51 - 49 என்ற ஓட்டு விகிதத்தில், வனிதா குப்தா நியமனத்துக்கு, செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
திருமதி வனிதாவின் கணவர் சட்ட உதவி சங்கம் ஒன்றில் சட்ட இயக்குநராக பணியாற்றுகிறார்.
இவர்களுக்கு இரு ஆண் மகன்கள் உள்ளனர்.

