ஜகார்த்தா: குறைந்த வருமானம் ஈட்டும் 20 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு மாதாமாதம் வழங்கப்பட்டு வந்த இலவச 10 கிலோ அரிசி திட்டத்தை இந்தோனீசிய அரசாங்கம் இவ்வாண்டு இறுதிவரை நீட்டித்துள்ளது.
இந்தோனீசியாவில் அரிசியின் விலை குறைந்திருந்தாலும் இந்தத் திட்டத்தால் பல மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர். அதனால் இதை நீட்டிப்பதாக அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்தார்.
எல் நினோ பருவநிலை மாற்றத்தால் இந்தோனீசியாவில் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதனால் உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் கண்டன. ஏழைகள் பாதிக்கப்படாமல் இருக்க 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலவச அரிசி விநியோகத் திட்டத்தை இந்தோனீசியா அறிவித்தது.
அரசாங்கத்திடம் உள்ள நிதியைப் பொறுத்துதான் இலவச அரிசி விநியோகத் திட்டம் செயல்படும் என்று விடோடோ தெரிவித்தார்.

