ஜகார்த்தா: இந்தோனீசியா தனது தற்காப்புப் பங்காளித்துவத்தையும் கடல்துறைப் பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் தீவர கவனம் செலுத்தி வருவதாக அதன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தோனீசியாவின் அரசுரிமையைப் பாதிக்கும் உத்திபூர்வ விவகாரங்களைக் கையாளும் முறையை மேம்படுத்த இருப்பதாகவும் திரு சுகியோனோ தெரிவித்துள்ளார்.
கடல்துறை பாதுகாப்பு, கடல்வழிப் பாதுகாப்பு மற்றும் மீன்பிடித்தல் போன்றவை அந்த விவகாரங்களில் அடங்கும்.
தென்சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான நடத்தை விதிகளை இறுதிசெய்வதற்கான ஆலோசனையை இந்தோனீசியா தொடர்ந்து வழங்கும் என்றும் அந்த விவகாரத்தில் ஆசியான் நடுநிலை வகிக்க அது முன்னுரிமை வழங்குவதாகவும் திரு சுகியோனோ குறிப்பிட்டார்.
தென்சீனக் கடல் விவகாரத்தில் தனக்குப் பெரிய பங்கு இல்லை என்று இந்தோனீசியா கருதுகிறது. ஆயினும், சீனாவின் கடலோரக் காவற்படை அண்மையில் இந்தோனீசியாவின் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்குள் பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தென்சீனக் கடல் எல்லை முழுவதும் தனக்குச் சொந்தம் என்று பெய்ஜிங் கூறி வருகிறது. அதற்கு ஏற்ப, மலேசியா, வியட்னாம், பிலிப்பீன்ஸ் ஆகியவற்றின் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்குள் சீனாவின் ஆகப்பெரிய கடலோரக் காவற்படைக் கப்பல் புகுந்து பிரச்சினையைக் கிளப்பி வருகிறது.
அந்த வட்டாரத்தில், தான் சட்டபூர்வமாக நடவமாடுவதாக சீனா தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் சுகியோனோ, தென்சீனக் கடல் என்னும் வட்டாரப் பூசலின் நெருக்கத்தில் இந்தோனீசியா இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அமைதிக்கான தீர்வுகாணும் தனது முன்னுரிமையை இந்தோனீசியா தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்றும் இந்த விவகாரத்தில் நடத்தை விதிகள் தொகுப்பு குறித்து ஆக்ககரமான பேச்சு நடத்த வலியுறுத்தும் என்றும் அவர் கூறினார்
இந்தோனீசியாவின் புதிய அதிபராக கடந்த அக்டோபர் மாதம் பிரபோவோ சுபியாந்தோ பதவி ஏற்றபோது வெளியுறவு அமைச்சராக சுகியோனோ நியமிக்கப்பட்டார்.