சாவ் பாலோ: இந்தோனீசியா ‘பிரிக்ஸ்’ (BRICS) அமைப்பில் அதிகாரபூர்வமாக முழு உறுப்பினராக இணைவதாக ஜனவரி 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பிரேசில் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு அந்த அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள பிரேசில் இதை அறிவித்தது.
இந்தோனீசியாவை இணைத்துக்கொள்வதற்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்திருப்பதாக அது கூறியது.
முன்னதாக, வளரும் பொருளியலைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பாகத் தொடங்கப்பட்ட ‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை இடம்பெற்றிருந்தன.
பின்னர் விரிவுபடுத்தப்பட்ட அந்த அமைப்பில் தற்போது எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவற்றுடன் இந்தோனீசியாவும் இணைந்துள்ளது.
மக்கள்தொகை அடிப்படையிலான பட்டியலில் உலகின் நான்காவது இடத்தில் உள்ள இந்தோனீசியா, ‘பிரிக்ஸ்’ அமைப்பில் சேர முன்பே விருப்பம் தெரிவித்திருந்தது.
2023ஆம் ஆண்டே உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்தபோதும் 2024ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலுக்குப் பிறகு இணைந்துகொள்வதாக இந்தோனீசியா கேட்டிருந்ததாக பிரேசில் கூறியது.
இந்தோனீசியாவின் புதிய அதிபராகத் திரு பிரபோவோ சுபியாந்தோ கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்றது நினைவுகூரத்தக்கது.