ஜகார்த்தா: உள்நாட்டு வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக இந்தோனீசியா மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிளைத் தயாரித்து அறிமுகப்படுத்தவுள்ளது.
அதன் விவரங்களை அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெள்ளிக்கிழமை (ஜூலை 17) தெரிவித்தார்.
அத்துடன் தேசிய அளவில் கார் ஒன்றை தயாரிப்பதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருவதாக அதிபர் குறிப்பிட்டார்.
அடுத்த சில வாரங்களுக்குள் இந்த தேசிய மின்சார மோட்டார் சைக்கிள் அறிமுகம் காணும் என்றார் அதிபர் பிரபோவோ.
கிழக்கு ஜாவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது விரைவில் இந்தோனீசியர்களால் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மக்களிடையே பயன்பாட்டில் இருக்கும் என்றார் அவர்.
ஏற்கெனவே அந்நாட்டு ராணுவமும் காவல்துறையும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஜீப்’ வகை வாகனங்களைப் பயன்படுத்தி வருவதை அதிபர் பெருமிதத்துடன் சுட்டினார்.
தாம் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, மலிவான விலையில் இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனத்துக்கு மாற்றாக அதிக விலையுள்ள உள்நாட்டில் தயாரான அதே வாகனத்தை தேர்வு செய்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
இன்றைய அளவில் இந்தோனீசியாவின் ‘பிடி பின்டாட்’ (PT Pindad) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ‘மாவுங்’ (Maung) நவீன வாகனத்தை இந்தோனீசியத் தற்காப்புப் படைகள் பயன்படுத்தி வருகின்றன.
அதன் மற்றொரு சிறப்பு வடிவான ‘எம்வி3 கருடா லிமோசின்’ வாகனம், 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தோனீசிய அதிபரின் அதிகாரபூர்வ வாகனமாகப் பயன்படுத்தப்பட்டு உள்நாட்டு தயாரிப்புக்குப் பெருமை சேர்த்து வருகிறது.

