ஜகார்த்தா: ஐஃபோன் 16 கைப்பேசிகளின் விற்பனை மீதான தடையை நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் US$100 மில்லியன் (S$134.8மி.) முதலீட்டுப் பரிந்துரையை இந்தோனீசியா நிராகரித்துள்ளது.
தான் எதிர்பார்க்கும் ‘நியாயம்’ அதில் போதவில்லை என அரசாங்கம் கூறியது.
உள்ளூரில் தயாரிக்கப்படும் உதிரிப் பாகங்களிலிருந்து 40 விழுக்காட்டு கைப்பேசிகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடும் உள்ளூர் முதலீட்டு விதிகளைப் பூர்த்திசெய்ய ஆப்பிள் தவறியதால், ஐஃபோன் 16 கைப்பேசிகளை விளம்பரப்படுத்துவதையும் விற்பதையும் இந்தோனீசியா அக்டோபரில் தடை செய்தது.
அத்தடை நீக்கப்பட்டு உள்ளூரில் புதிய வகை கைப்பேசிகளின் விற்பனையை அனுமதிக்க, இந்தோனீசியாவில் முதலீடுகளை US$100 மில்லியன் உயர்த்த ஆப்பிள் முன்மொழிந்திருந்தது.
ஆனால், அரசாங்கத்தின் தேவைகளை ஆப்பிள் பூர்த்திசெய்யவில்லை என்று தொழில்துறை அமைச்சர் அகுஸ் குமிவாங் சொன்னார்.