ஜகார்த்தா: இந்தோனீசியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்படும் நிலையில் இருந்த ஒரு பெண் ஓராங் ஊத்தானும் அதன் குட்டியும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (செப்டம்பர் 5) தெரிவித்தனர்.
அவை தங்கியிருந்த இயற்கைப் பகுதியைக் காட்டுத்தீ நெருங்கியதைத் தொடர்ந்து அவை மீட்கப்பட்டன.
போர்னியோ, சுமத்ரா ஆகியவற்றில் கடும் புகைமூட்டத்தை ஏற்படுத்தியுள்ள காட்டுத்தீயை இந்தோனீசியா பல வாரங்களாக எதிர்கொண்டுவருகிறது. அதனால் மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளும் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஓராங் ஊத்தானும் அதன் பிள்ளையும் மேற்கு கலிமந்தானில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றுக்கு அருகே தோட்டத்தில் காணப்பட்ட பிறகு கடந்த ஜூலை மாதத்திலிருந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றன. உள்ளூர் இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று இத்தகவலை அறிக்கை மூலம் தெரிவித்தது.
ஆனால், அவை தங்கியிருந்த இயற்கைப் பகுதியை நோக்கி காட்டுத்தீ பரவியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (செப்டம்பர் 3) அவற்றை வெளியேற்ற அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
அவ்விரு ஓராங் ஊத்தான்களின் உடல்நலனையும் விலங்கு மருத்துவர்கள் அணுக்கமாகக் கண்காணித்துவருகின்றனர். முதற்கட்டப் பரிசோதனைகளில் அவற்றுக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் மேற்கு கலிமந்தானின் கெட்டாப்பாங் மாவட்டத்தில் காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக மொத்தம் ஒன்பது ஓராங் ஊத்தான்கள் இடம் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்ற வாரம் மீட்கப்பட்ட ஓராங் ஊத்தான் புகையுடன் அதிகத் தொடர்பு ஏற்பட்டதால் இறந்துபோனதாகத் தெரிவிக்கப்பட்டது.


