ஜகார்த்தா: இந்தோனீசியாவின் இபூ எரிமலை திங்கட்கிழமை (மே 13) காலை குமுறியது.
எரிமலை திடமான சாம்பலைக் கக்கியதாகவும் அந்த சாம்பல் வானத்தை நோக்கி சில கிலோ மீட்டர் தூரம் வரை பறந்ததாகவும் எரிமலையை ஆய்வு செய்யும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இபூ எரிமலை ஹல்மஹெரா தீவில் உள்ளது. அது உள்ளூர் நேரப்படி காலை 9.12 மணிக்குக் குமுறியது. சாம்பல் வானத்தை நோக்கி குறைந்தது 5 கிலோமீட்டர் தூரமாவது பறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் மே 10ஆம் தேதியும் இபூ எரிமலை குமுறியது.
எரிமலை இருக்கும் பகுதியில் இரண்டாம் உச்சக்கட்ட விழிப்புநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
எரிமலையைச் சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் மழை பெய்தால் முகக்கவசம், கண்ணாடிகள் அணிந்துகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அவ்வட்டாரத்தில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை. எரிமலை குழுறும் காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த சில வாரங்களாகவே இந்தோனீசியாவில் உள்ள சில எரிமலைகள் வெடித்தும் குமுறியும் வருகின்றன.

