ஜகார்த்தா: பன்றி இறைச்சியை உண்பதற்குமுன் இஸ்லாமிய முறையில் வழிபட்ட இந்தோனீசிய மாது லீனா முகர்ஜிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஈராண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.
அவர் வழிபடுவதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் பரவிவருகிறது.
இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டுள்ள இந்தோனீசியாவில் அந்தக் காணொளிக்குப் பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமயத்தினருக்கும் குறிப்பிட்ட குழுக்களுக்கும் எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் நோக்கில் தகவல்களைப் பரப்புவதாக முகர்ஜிமீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அந்தக் காணொளி குறித்து குடியிருப்பாளர் ஒருவர் புகார் செய்திருந்தார். மில்லியன்கணக்கானோர் அந்தக் காணொளியைப் பார்த்திருந்தனர்.
இந்தோனீசியாவில் பெரும்பாலோர் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றனர். அதில் பன்றி இறைச்சி தடைசெய்யப்பட்டுள்ளது.
தான் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர் என்று முகர்ஜி கூறினார். அவரது செயலுக்கு இந்தோனீசியாவின் முன்னணி முஸ்லிம் மன்றமும் பழைமைவாதக் குழுக்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.
முகர்ஜிக்கு 250 மில்லியன் ரூப்பியா (S$22,177) அபராதம் விதிக்கப்பட்டது. அதனைச் செலுத்தத் தவறினால், அவரது சிறைத்தண்டனை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
இந்தோனீசியாவில் நடந்த சமய நிந்தனை தொடர்பான வழக்குகளில் ஆக அண்மைய வழக்கு இது.