இந்தோனீசியாவில் ஒரு நூடல்ஸ் பாக்கெட்டுக்காக அண்ணனைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார் தம்பி.
சம்பவம் ஏப்ரல் 8ஆம் தேதி தென் சுமத்திராவில் உள்ள லாலன் மாவட்டத்தில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமது காலை உணவுக்காக 15 வயது தம்பி, உடனடியாக உண்ணக்கூடிய இன்ஸ்டன்ட் நூடல்ஸ் ஒன்றை வாங்கி வந்துள்ளார்.
தம்பி ஒரு பாக்கெட் நூடல்ஸ் மட்டும் வாங்கிவந்ததால் ஆத்திரத்தில் 27 வயது அண்ணன் தமது தம்பியை அறைந்தும் அடித்தும் உள்ளார்.
கோபத்தில் 15 வயது தம்பி காய்கறி வெட்டும் கத்தியால் அண்ணனை வயிற்றில் குத்தியுள்ளார்.
காயமடைந்த 27 வயது ஆடவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
தற்போது அந்த 15 வயது சிறுவன் காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவன் மிகவும் அமைதியானவன் என்று அவ்வட்டார மக்கள் கூறுகின்றனர்.