இந்தோனீசியாவைச் சேர்ந்த சந்திரா அஸ்ரி குழுமம் சிங்கப்பூரின் புக்கோம் தீவில் உள்ள ஷெல் நிறுவனத்தின் சுத்திகரிப்பு வளாகத்தை வாங்கியுள்ளது.
உலகில் எண்ணெய், ரசாயன எண்ணெய்க்கு தேவை அதிகரித்து வருவதால் இவற்றின் நடவடிக்கைகள் தனித்தனியாக இருப்பதைவிட ஒருங்கிணைப்பதில் உள்ள நன்மைகள் பயனளிக்கும் என்று சந்திரா அஸ்ரி குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
“தென்கிழக்கு ஆசியா உயர் வளர்ச்சி அடையும் வட்டாரம். அதனால், கட்டுப்படியாகக்கூடிய நிலையில் கிடைக்கும் எரிசக்தி, ரசாயனப் பொருள்களுக்கு தேவை உள்ளதாக நாங்கள் திடமாக நம்புகிறோம்,” என்று சந்திரா அஸ்ரி குழும மனிதவள, நிறுவன விவகாரங்கள் தொடர்பான இயக்குநர் திரு சுரியாண்டி விளக்கினார்.
இந்த 2024ஆம் ஆண்டிலிருந்து 2026ஆம் ஆண்டுவரை தாங்கள் வாங்கிய ஷெல் நிறுவனத்தின் வருவாய் ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்று அந்தக் குழுமம் எதிர்பார்க்கிறது. அதற்கு புக்கோம், ஜூரோங் தீவுகளில் உள்ள ‘ஷெல் எனர்ஜி அண்ட் கெமிக்கல்ஸ் பார்க்’கில் இருக்கும் வளங்களுடன் இந்தோனீசியாவில் அதற்கென மேற்கொள்ளப்படும் விரிவாக்கமும் உதவும் என்றும் நம்பப்படுகிறது.
“சிங்கப்பூர் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு, ரசாயன மையமாக விளங்குகிறது. ஷெல் நிறுவனத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இடம் சந்தையில் உள்ள மற்ற வட்டார நிறுவனங்களுடன் இணைப்பை வலுப்படுத்தும்,” என்று திரு சுரியாண்டி தெரிவித்தார்.

