ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் முக்கியத் திட்டமான இலவச உணவுத் திட்டத்தை மேற்பார்வையிடும் தேசிய ஊட்டச்சத்து ஆணையத்தின் தலைவர் நானிக் சுடர்யாத்தி டேயாங், உடல்நலத்தைக் காரணம் காட்டி பதவி விலகி உள்ளார்.
கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்ற இவர், தீவிர மனஅழுத்தம் காரணமாக ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டில் சிகிச்சை பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆணையத்தின் மேற்பார்வைக் குழுவை வழிநடத்துமாறு அதிபர் தம்மிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக நானிக் குறிப்பிட்டுள்ளார். 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இலவச உணவுத் திட்டம், விநியோகச் சிக்கல்கள், தரம் குறைந்த உணவுகள் மற்றும் பல இடங்களில் ஏற்பட்ட நச்சு உணவுச் சம்பவங்களால் சர்ச்சையில் சிக்கியது.
மேலும், இதன் முன்னாள் தலைவர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடக்கத்தில் 335 டிரில்லியன் ரூப்பியாவாக இருந்த நிலையில், தற்போது 229 டிரில்லியன் ரூப்பியாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் உட்பட 83 மில்லியன் பேரை இலக்காகக் கொண்ட இத்திட்டத்தில், இதுவரை 62.5 மில்லியன் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

