டெஹ்ரான்: ஈரானில் தேசிய அளவிலான இணையத் தடை வியாழக்கிழமை செயல்படுத்தப்பட்டதாக இணையக் கண்காணிப்பு அமைப்பான ‘நெட்புளோக்ஸ்’ தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் தற்போது ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகையில் புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த முடிவு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெஹ்ரானிலும் மஷ்ஹாத், இஷ்ஃபஹான் ஆகிய பெருநகரங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு, சமய போதகர்கள் கொண்டுள்ள அந்நாட்டின் ஆட்சிமுறைக்கு எதிராக முழக்கமிட்டனர்.
1979 புரட்சியால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னால் ஈரானிய மன்னரின் மகன் ரெஸா பஹ்லவி, ஆர்ப்பாட்டங்களை ஊக்குவிக்கும் பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் புதன்கிழமை பதிவிட்டார்.
ஈரானின் நாணய வீழ்ச்சிக்கு அடுத்து 12 நாளாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவதாக மனித உரிமைக் குழுக்கள் கூறி வருகின்றன.
ஆனால் நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் அமைதி நிலவுவதாக ஈரானிய அரசு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

