கோலாலம்பூர்: மலேசிய ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ஹஃபிஸுடின் ஜன்தான் அவருக்கு எதிரான விசாரணைக்கு உதவுவதற்காக உடனடி விடுப்பில் உள்ளார்.
இதனை அரசாங்கச் செய்தி ஊடகமான பெர்னாமா தெரிவித்துள்ளது. மலேசியத் தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின், அதிகாரிகள் விசாரணையை பாரபட்சமும் முரண்பாடும் இல்லாமல் நடத்த தலைமைத் தளபதியின் விடுப்பு உதவும் என்று கூறியதாக பெர்னாமா குறிப்பிட்டுள்ளது. தளபதி ஹஃபிஸுடின் மீது எவ்விதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் விவரிக்கவில்லை.
கடந்த 2023ஆம் ஆண்டுமுதல் 2025ஆம் ஆண்டுவரை ராணுவத் தளவாடங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன. அது குறித்து விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதி மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் தொடங்கியுள்ளது. இதனை ஆணையத்தின் தலைவர் அஸாம் பக்கி தெரிவித்துள்ளதாக பெர்னாமா செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் பல நிறுவனங்கள் அதிக விலையில் ராணுவ ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மூன்று நபர்களின் வாக்குமூலங்கள் டிசம்பர் 24ஆம் தேதி பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மலேசியத் தற்காப்பு அமைச்சு எவ்விதக் கருத்துகளையும் அதற்குமேல் வெளியிடவில்லை.

