மனாமா: பஹ்ரேனின் சித்ரா தீவுமீது ஈரான் நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளதாகத் திங்கட்கிழமையன்று (மார்ச் 9) அந்நாடு தெரிவித்தது.
மத்திய கிழக்கு வட்டாரங்களில் உள்ள நாடுகள்மீது ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மற்ற வளைகுடா நாடுகளும் புதிய தாக்குதல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்கள் அனைவரும் பஹ்ரேனைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் பிள்ளைகள் உட்பட நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கத்தார் தலைநகர் டோஹாவில் திங்கட்கிழமையன்று பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவற்றின்மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் ஏஎஃப்பி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள்மீது ஈரான் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியது.
அதன் விளைவாகக் கத்தார் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, ஈரான் பாய்ச்சிய ஏவுகணைகளைத் தடுத்து அழித்ததாகக் கத்தார் தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது.
சவூதி அரேபியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஷய்பா (Shaybah) எண்ணெய் வயலை நோக்கி வந்த இரு ஆளில்லா வானூர்திகளை இடைமறித்து அழித்ததாகச் சவூதி தற்காப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வான் பாதுகாப்புப் படையினர் ஏவுகணை அச்சுறுத்தலை வெற்றிகரமாக முறியடித்ததாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தேசிய அவசரக்கால பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மார்ச் 8ஆம் தேதி, ஏழு ஏவுகணைகளாலும் ஐந்து ஆளில்லா வானூர்திகளாலும் தாக்கப்பட்டதாகவும் மார்ச் 9ஆம் தேதி மீண்டும் ஏவுகணை, ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

