டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு வேவு பார்த்த சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆடவரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது.
அந்நாட்டு நீதித் துறை அதனைத் தெரிவித்தது. அங்கு அண்மை வாரங்களில் பலர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்பட்டது.
யூதர்களின் ஆட்சிக்குச் சாதகமாய் வேவு பார்த்த குற்றத்திற்காக யாக்கோப் கரிம்ப்போரும் நாசர் பெக்கிர்சாடேயும் தூக்கிலிடப்பட்டதாக நீதித்துறையின் மிஸான் இணையச் சேவை தெரிவித்தது.
இருவரும் எப்போது கைதுசெய்யப்பட்டனர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
கடந்த ஆண்டு (2025) ஜூன் மாதத்தில் ஈரானும் இஸ்ரேலும் 12 நாள்கள் சண்டையிட்டன. அப்போது ஈரானியப் பாதுகாப்பு, ராணுவத் தளங்களைப் படம்பிடித்து பெக்கிர்சாடே இஸ்ரேலின் வேவுத் துறை அதிகாரிக்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
பெக்கிர்சாடேயின் நடவடிக்கைகள் போர்க்காலத்தில் நடைபெற்றதா என்பதைத் திரு மிசான் குறிப்பிடவில்லை.
பிப்ரவரி 28ஆம் தேதி, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான்மீது போர் தொடுத்தன. அதன் பின்னர் அண்மைக் காலமாக ஈரான், ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட எதிர்ப்புப் பேரணிகளுடன் தொடர்புடையோரைத் தூக்கிலிட்டு வருகிறது.


