துபாய்: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் பெரிய அளவில் தாக்குதலை நடத்தியிருக்கின்றன.
போர் தொடங்கிய பிறகு, செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) நடத்தப்பட்ட தாக்குதலே ஆகக் கடுமையானது என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விரும்பக்கூடும் என்று உலகப் பங்குச் சந்தைகள் கணித்திருந்தன. ஆனால் அதற்கு மாறாகத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் எண்ணெய்ப் போக்குவரத்தைத் தடுக்கப்போவதாக ஏற்கெனவே ஈரானியப் புரட்சிக் காவற்படை கூறியிருந்தது.
செவ்வாய்க்கிழமை மாலை கத்தாரில் உள்ள அல் உடேய்ட் தளத்தின்மீதும் ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள அல் ஹரிர் தளத்தின்மீதும் ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக அது தெரிவித்தது. இரண்டு தளங்களையும் அமெரிக்கா நிர்வகிக்கிறது.
எண்ணெய்ப் போக்குவரத்தை ஈரான் நிறுத்தினால், தாக்குதல் கடுமையாக இருக்கும் என்ற திரு டிரம்ப்பின் மிரட்டலை வெள்ளை மாளிகை மறுஉறுதிப்படுத்தியது.
“ஈரானில் ஆகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும். முன்னெப்போதையும்விட துல்லியமான வேவுத் தகவல்களோடு ஆக அதிகப் போர் விமானங்களையும் வெடிகுண்டு வீசும் விமானங்களையும் கொண்டு ஆகக் கூடுதலான தாக்குதல்கள் நடத்தப்படும்,” என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் கூறினார். அமெரிக்கத் தற்காப்பு அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.
ட்ரூத் சமூக ஊடகத்தில் டிரம்ப்
பின்னர் தாக்குதல்பற்றித் திரு டிரம்ப்பும் ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த சில மணி நேரத்தில், கண்ணிவெடிகளை வைத்துச்செல்லும் 10 ஈரானியக் கப்பல்களைத் தாக்கி முழுமையாக அழித்திருக்கிறோம்,” என்றார் அவர்.
இருப்பினும், தாக்குதல் எந்தப் பகுதியில் நடத்தப்பட்டது என்பதை அமெரிக்க அதிபர் தெரிவிக்கவில்லை.

