டெஹ்ரான்: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் இரண்டு பல்கலைக்கழகங்களைத் தாக்கி அழித்ததால் பதிலடித் தாக்குதல் நடத்தப்படும் என்று டெஹ்ரான் எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைத் தாக்கப்போவதாக ஈரானியப் புரட்சிப் படை மிரட்டியுள்ளது.
“அமெரிக்க அரசாங்கம் இவ்வட்டாரத்தில் உள்ள அதன் பல்கலைக்கழகங்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளிலிருந்து தப்ப வேண்டுமானால், டெஹ்ரான் நேரப்படி மார்ச் 30, திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குள் பல்கலைக்கழகங்கள் மீதான குண்டுவீச்சைக் கண்டிக்க வேண்டும்,” என்று ஈரானிய ஊடகங்கள் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தன.
“மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் அனைத்து ஊழியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், அவற்றின் சுற்றுப்புறங்களில் வசிப்போர் ஆகியோரை வளாகங்களிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்குமாறு அறிவுறுத்துகிறோம்,” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளைகுடாப் பகுதியில் பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. கத்தாரில் டெக்சஸ் ஏஅண்ட்எம் பல்கலைக்கழகம், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகம் ஆகியவை அவற்றில் சில.
மார்ச் 27, 28 ஆகிய நாள்களில் டெஹ்ரானில் உள்ள அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உட்பட பல இடங்கள் வெடிகுண்டுகள் வீசித் தாக்கப்பட்டன. இதில் பல கட்டடங்கள் சேதமடைந்தன. உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

