ஜப்பான் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் உதவும்

ஜப்பான் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் உதவும்

2 mins read
ஒத்துழைத்தால், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பாதுகாப்பாக நீரிணையைக் கடக்க உதவி வழங்கப்படும்: ஈரான் வெளியுறவு அமைச்சர்
35cfb0a9-6539-4dd9-bdc2-08a4446744af
ஹோர்முஸ் நீரிணையின் வரைபடம். - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துசெல்வதற்கு உதவ ஈரான் தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி செய்தி நிறுவனத்துடன் சனிக்கிழமை (மார்ச் 21) நடந்த தொலைபேசி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

“பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன, நீரிணையை நாங்கள் மூடவில்லை அது திறந்துதான் உள்ளது,” என்று ஜப்பானின் கியோடா செய்தி ஊடகத்திடம் அவர் கூறினார்.

தொடர்ந்து நடந்துவரும் போரைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், “சண்டை நிறுத்தத்திற்கு நாங்கள் தயாராகவில்லை. ஆனால் நிரந்தரமான நீடித்த அமைதியைத்தான் ஈரான் எதிர்பார்க்கிறது,” என்று தெரிவித்தார்.

ஈரான்மீது நடந்துவரும் தாக்குதலுக்கு ஆதரவாக உள்ள நாடுகளின் கப்பல்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதுகாப்பு கருதி, மற்ற நாடுகளின் கப்பல்களுக்கு ஆதரவு வழங்கிவருவதாக அமைச்சர் அப்பாஸ் விளக்கினார்.

ஈரானுடன் ஒத்துழைத்தால், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பாதுகாப்பான வகையில் நீரிணையைக் கடக்க உதவி வழங்கத் தயார் என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் இருந்து வரும் எண்ணெய் ஜப்பானின் 90 விழுக்காடு பயன்பாட்டுக்குத் தேவைப்படுகிறது. அவை ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தே கப்பல்களில் வரவேண்டியுள்ளது.

ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் டொஷிமிட்சு மொடெகி உடன் அண்மையில் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் விவரங்களை வெளியிடமுடியாது என்பதையும் ஈரானிய அமைச்சர் தெரிவித்தார்.

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இரண்டு முறை ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஈரானுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி முன்னாள் ஜப்பானியத் தூதராக பணியாற்றியவர்.

குறிப்புச் சொற்கள்