டெஹ்ரான்: ஈரான் தனது வான்வெளியை அனைத்துலக விமானச் சேவைக்கு மீண்டும் திறந்துள்ளது.
இஸ்ரேலுடனான சண்டை நிறுத்தத்திற்குப் பிறகு ஈரான் இந்த முடிவை ஜூன் 28ல் அறிவித்தது.
இருந்தபோதும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, ஈரானின் பல்வேறு பகுதிகளில் நிலவுவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
ஈரானின் கிழக்குப் பகுதியின் வான்வெளி, உள்நாட்டு மற்றும் அனைத்துலக செயல்பாடுகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
நாட்டின் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளிலுள்ள விமான நிலையங்களின் சேவை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த விமான நிலையங்களுக்குப் போகவேண்டாம் என அதிகாரிகள், குடிமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாள் நீடித்த மோதலுக்குப் பிறகு சண்டை நிறுத்தம் ஜூன் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈரான் தனது கிழக்கு வான்வெளியை ஜூன் 25 திறந்தது.
12 நாள் மோதலின்போது ஈரானில் கொல்லப்பட்ட 60 பேருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
உயிரிழந்தோரில் ராணுவத் தலைவர்களும் அணுவாயுத விஞ்ஞானிகளும் அடங்குவர். தலைநகர் டெஹ்ரானின் இங்ஹெலாப் சதுகத்தில் இறுதி மரியாதை செய்யப்பட்டது.

