குவைத் சிட்டி: குவைத்தின் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டிகள், பஹ்ரேனில் உள்ள சுத்திகரிப்பு ஆலை ஆகியவற்றின்மீது ஈரான் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) தாக்குதல் தொடுத்துள்ளது.
ஈரான் அதன் அண்டை நாடுகள்மீது தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஏவுகணையும் ஆளில்லா வானூர்திகளையும் பாய்ச்சிவருகிறது.
கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு எல்லைப் பகுதி காவல் படை அதிகாரிகளும் தாக்குதலில் கொல்லப்பட்டதாக குவைத்தின் உள்நாட்டு அமைச்சு தெரிவித்தது.
ஈரான்மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் தொடுத்ததை அடுத்து அண்டை நாடுகள் ஈரானால் தொடர்ந்து தாக்கப்படுகின்றன.
வளைகுடா நாடுகளின் தளங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா தன்னைத் தாக்கினால் ஈரான் பதிலடி கொடுத்துதான் ஆகவேண்டும் என்று ஈரானிய அதிபர் மசூது பெசெஷ்கியான் எச்சரித்தார்.
மார்ச் 7ஆம் தேதி அவர், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள்மீது நடத்திய தாக்குதல்களுக்காக அண்டை நாடுகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், கத்தார், குவைத் ஆகியவற்றில் புதிய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் குறிப்பிட்டன.
குவைத்தின் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டிகள் ஆளில்லா வானூர்தித் தாக்குதலின்போதி குறிவைக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
விமான நிலையத்தில் தாக்குதலாக் மூண்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குவைத் செய்தி நிறுவனம் சொன்னது.
முக்கியமான உள்கட்டமைப்பின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் அது என்று ராணுவம் சாடியது.
ஈரானின் ஆளில்லா வானூர்தியை இடைமறித்தபோது வானிலிருந்து விழந்த சிதைவுகளால் அருகில் இருந்த கட்டடங்களுக்குச் சேதம் ஏற்பட்டதாகவும் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, குவைத்தின் அனைத்துலக எண்ணெய் நிறுவனம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதன் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக்கொள்வதாக அறிவித்தது.
சமூகப் பாதுகாப்புக்கான குவைத்தின் முக்கிய கட்டடமும் ஈரானால் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானின் ஆளில்லா வானூர்தி நீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றைச் சேதப்படுத்தியதாக பஹ்ரேனின் உள்நாட்டு அமைச்சு உறுதிப்படுத்தியது.

