துபாய் / ஜெருசலம்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மிரட்டலையும் கடந்து, ஈரானின் ஆட்சியாளர்கள், மறைந்த தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மகன் மொஜ்தபா காமெனியை நாட்டின் புதிய தலைவராக அறிவித்துள்ளனர்.
அறிவிப்பு வெளிவந்த சில மணிநேரங்களிலேயே, அமெரிக்காவும் இஸ்ரேலும் புதிய தலைவர் நெடுநாள் நீடிக்கமாட்டார் என்று எச்சரித்துள்ளன.
அண்மையில் ஈரானின் புதிய தலைமையைத் தேர்ந்தெடுப்பதில் தமக்கு முக்கியப் பங்குள்ளதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். மறைந்த தலைவரின் மகன் பொருத்தமானவர் அல்லர் என்றும் அவர் கூறியிருந்தார்.
அமெரிக்காவை நேரடியாகச் சாடுவதற்கே ஈரானின் ஆட்சியாளர்கள் திரு மொஜ்தபாவைத் தேர்வு செய்துள்ளனர்.
இந்த முடிவின் வழியாக ஈரான் ஆட்சியாளர்கள், நாடு தங்கள் கைவசம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் என்று கருதப்படுகிறது.
ஈரானிய அரசமைப்பின்படி, அதன் தலைவர் வெளியுறவுக் கொள்கை, அணுசக்தித் திட்டம், புரட்சிக் காவல்படை ஆகியவற்றின் மீதான இறுதி அதிகாரங்களுக்குப் பொறுப்பேற்பார். அதோடு, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் அதிபருக்கும், நாடாளுமன்றத்துக்கும் அவரே வழிகாட்டியாகச் செயல்படுவார்.
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் மோஜ்தபாவின் குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதால், அந்நாடுகளுடன் சமரசப் போக்கை அவர் மேற்கொள்ளமாட்டார் என்பது பலரின் கணிப்பாக உள்ளது.

